என்ன நாளோ, என்ன நேரமோ எதுவும் தெரியவில்லை ஒரு நாள் நான் இறந்திருந்தேன் ஊட்டி வளர்த்த பாட்டிக் கிழவிக்கு முன்னோ, பின்னோ - நான் மாண்டு போனதென்னவோ மண்ணோடு தான்! ஏதோ இயற்றிக்கொண்டிருந்தபோது நான் இறந்துவிட்டிருக்கவேண்டும் படைப்பில் கரைந்துகொண்டே பாடையில் உறைந்திருக்கிறேன்(!) இடையில் இறந்ததினால் இறுதிவரை முடிக்கவில்லை என்னவாய் இருந்திருக்கும் - என் எழுதாத இறுதிவரி? கடந்துபோன மரணங்களை எல்லாம் நின்று பார்த்த அனுபவத்தில் நின்று போன தருணத்தில் நில்லாது போனவர்களை என்னவென்று சொல்லுவது? கைகொடுக்கையில் கரந்தராதவர்கள். . . பேசட்டும் பேசலாம் என்றிருந்தவர்கள். . . வணக்கம் வைத்தபோதும் திரும்பிக்கொண்டவர்கள். . . என்று கொஞ்சங்கொஞ்சமாய் கழண்டுபோன மனிதமற்ற சமூகத்தில் வழிந்துவந்த ஜீவனொன்று - என் வலதுகை மோதிரத்தை வாரிச்சுருட்டி செல்லலாக. . . இறந்துவிட்ட சேதிகேட்டு பிரிந்தோரெல்லாம் கூடினார்கள் - இதில் துயருண்டோர் எவரெவரோ? துள்ளலுற்றோர் எவரெவரோ? ஏழைப்படைப்பாளனாய் பலரைப் பகைத்திருந்தேன் ஆட்கள் வந்தனரா? அனாதையாய் கிடந்தேனா? தூக்கிப் போடமட்டும் யாரோ நாலுபேரை எங்கெங்கிருந்தோ - நான் சம்பாதித்திருக்கின்றேன் விறகா, மின் தகனமா எதுவென்றறியேனே தீவைத்து மூட்டினார்கள் சுரனையே எனக்கில்லை ஒருவேளை இருந்திருந்தால் கத்தியே இருக்கமாட்டேன் சத்தியமாய் சொல்லுகிறேன் சந்தோசமாய் செத்திருப்பேன் -தமிழ் வசந்தன் 01.01.2011 |