Jan 2, 2011

கண்ணீர் அஞ்சலி

என்ன நாளோ, என்ன நேரமோ
எதுவும் தெரியவில்லை
ஒரு நாள் நான் இறந்திருந்தேன்

ஊட்டி வளர்த்த பாட்டிக் கிழவிக்கு
முன்னோ, பின்னோ - நான்
மாண்டு போனதென்னவோ
மண்ணோடு தான்!

ஏதோ இயற்றிக்கொண்டிருந்தபோது
நான் இறந்துவிட்டிருக்கவேண்டும்
படைப்பில் கரைந்துகொண்டே
பாடையில் உறைந்திருக்கிறேன்(!)
இடையில் இறந்ததினால்
இறுதிவரை முடிக்கவில்லை
என்னவாய் இருந்திருக்கும் - என்
எழுதாத இறுதிவரி?

கடந்துபோன மரணங்களை எல்லாம்
நின்று பார்த்த அனுபவத்தில்
நின்று போன தருணத்தில்
நில்லாது போனவர்களை
என்னவென்று சொல்லுவது?

கைகொடுக்கையில்
கரந்தராதவர்கள். . .
பேசட்டும் பேசலாம்
என்றிருந்தவர்கள். . .
வணக்கம் வைத்தபோதும்
திரும்பிக்கொண்டவர்கள். . .  என்று
கொஞ்சங்கொஞ்சமாய் கழண்டுபோன
மனிதமற்ற சமூகத்தில்
வழிந்துவந்த ஜீவனொன்று - என்
வலதுகை மோதிரத்தை
வாரிச்சுருட்டி செல்லலாக. . .

இறந்துவிட்ட சேதிகேட்டு
பிரிந்தோரெல்லாம் கூடினார்கள் - இதில்
துயருண்டோர் எவரெவரோ?
துள்ளலுற்றோர் எவரெவரோ?

ஏழைப்படைப்பாளனாய்
பலரைப் பகைத்திருந்தேன்
ஆட்கள் வந்தனரா?
அனாதையாய் கிடந்தேனா?
தூக்கிப் போடமட்டும்
யாரோ நாலுபேரை
எங்கெங்கிருந்தோ - நான்
சம்பாதித்திருக்கின்றேன்

விறகா, மின் தகனமா
எதுவென்றறியேனே
தீவைத்து மூட்டினார்கள்
சுரனையே எனக்கில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
கத்தியே இருக்கமாட்டேன்
சத்தியமாய் சொல்லுகிறேன்
சந்தோசமாய் செத்திருப்பேன்

-தமிழ் வசந்தன்
01.01.2011