Jan 20, 2011

வாக்களியாதீர் - எங்கள் சின்னம் சவம்!


நாங்கள் ஆட்சிக்கு வந்தால். . .

பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள்
கண்ட இடத்தில் சுடப்படுவார்கள்

லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆயுளும்
கொடுப்பவர்களுக்குத் தூக்கும் விதிப்போம்

ஊழல் பெருச்சாலிகளை
உயிரோடு கொளுத்துவோம்

பாலியல் துன்புறுத்தல் செய்தால்
பாரபட்சமின்றி
கட்டிவைத்துத் தோலுரிப்போம்

நாதியற்று விடப்படும்
பெற்றவர்களின் பிள்ளைகளைச்
சோறுதண்ணீரின்றிச்
சாகடிப்போம்

கடத்தல் கும்பல்களெல்லாம்
பறிகொடுத்த மக்களாலேயே
கருணாகடாட்சமின்றி
காவுவாங்கப்படுவார்கள்

கலப்படம் செய்பவர்களானால்
கள்ளிப்பால் அவர்களின்
கடைசி உணவு.

வக்கிரம் பேசும் வாய்க்கு
மலமும், கழிவுமே இரை

வருமானவரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு
பணத்தில் சில்லரையைப் பிசைந்து
உணவாகத் தருவோம்

வறியவர்களிடம் தாட்டியங்காட்டி
உடைமைபறித்து கொட்டமடிப்பவர்கள்
மக்கள் நிறைந்த சதுக்கத்தின் வெளியில்
ரத்தவெறிபிடித்த நாய்களுக்கு நடுவே
நிராயுதபாணியாய் நிற்கவைக்கப்படுவார்கள்

குடித்துவிட்டு கொடுமைசெய்பவர்கள்
தயவுதாட்சணியமின்றி
நஞ்சு புகட்டிக் கொல்லப்படுவார்கள்.
மதுக்கடைகள் வெடிக்கிறையாகும்.

பணத்திற்காக சமூகத்தின்
ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையுமே
சீரழிக்கத் துணிந்து
இளைய தலைமுறையிரிடம்
வக்கிரத்தைத் தாண்டவமாடச் செய்ய
துணைபுரியும் கனவான்களின்
தூக்கிலிடப்பட்ட நிர்வாணப்பிணங்கள்
சனங்களுக்கு நடுவே
கழுகுகளுக்கு விருந்தாகும்

 சட்டம் சாட்டையால் காக்கப்படும்

மதுக்கடை திறக்கவும்
அனுமதி வழங்கும்
ஜனநாயகத்தைவிட
மனசாட்சியுள்ள மனநாயகமாகத்தான்
எங்கள் ஆட்சி நடக்கும்

எங்கள் ஆட்சியில்
நல்ல ஓட்டுப்போடும் சுதந்திரம்
எல்லோருக்கும் உண்டு என்பதாலும்
கள்ள ஓட்டு போடுபவர்களின்
விரல்கள் நறுக்கப்படும் என்பதாலும்
நீங்கள் விரும்பும் சுயநல ஆட்சியை
மறுபடியும் தாராளமாகக்
தேர்ந்தெடுக்க முடியும்.
ஆனாலும், மறுபடியும்
ஒருநாள் நாங்கள்
ஆட்சிக்கு வருவோம் என்பதை
உறுதிபடச் சொல்கிறோம்.

எள்ளளவு ஐயமிருந்தாலும்
வாக்களியாதீர் - எச்சரிக்கை!
உங்கள் வீட்டிலும் 
குற்றவாளிகள் இருக்கலாம்!

-தமிழ் வசந்தன்