![]() |
அடுக்கடுக்கடுக்காய் ஆங்கிலம் பேசும் கறுப்புத் தமிழச்சி வேண்டும். இழுத்து மூடிய இரும்புத் திரையை தகர்த்து எறிந்திட வேண்டும் திருஷ்டிப் பொட்டுக் கறுப்பு என்னும் மடமையை மாற்றிட வேண்டும் - அவள் மட்டந்தட்டும் மடையர்களின் கொட்டம் தட்டிட வேண்டும். துணிவின் உருவம் என்பவளாய்... அறிவின் கருவம் கொண்டவளாய்... வெள்ளை மோகம் வெல்பவளாய்... கறுப்புச் சரித்திரம் செய்பவளாய்... நிறபேதத்தைக் கொல்பவளாய்... நிறைய நிறைய கற்றவளாய்... நிமிர்ந்து எரியும் பெண்ணெருப்பாய்... படர்ந்து பரவும் சுடரொளியாய்... உலகே வியக்கும் ஊற்றறிவாய்... ஆகத்துடிக்கும் குணவதியாய்... செயலிற் கறுப்புப் பெண்புயலாய்... வராறுரைக்கும் மங்கையளாய்.. கறுப்பின் பொருளை மாற்றட்டும். கன்னியர் அவளைப் போற்றட்டும். மடமை இருளைப் போக்கட்டும். மனிதந்தன்னை நாட்டட்டும். கறுப்பு என்பதால் மணமாகாமல் முடங்கியோர் நிலை மாறட்டும். மனது என்பதே முக்கியம் எனும் மூலசூத்திரம் வெல்லட்டும். நிறங்கறுத்தவர் தலைகோணாமல் நிமிர்ந்து நேர்கொண்டு வாழட்டும். நீதிமறந்து கேலிசெய்வோரை உலகே கைகோர்த்துத் தூற்றட்டும். அன்பும், அறிவும், திறமையுமே பண்பு உள்ளவர் நோக்குவது, என்று அத்தனைப் பேரையுமே எந்த ஆட்சியில் ஆக்குவது? காண வேண்டி-ஓர் புரட்சிப்போர் பாக்கியிருக்குது தமிழச்சி எங்கிருக்கிறாய் உடனே வா ஏங்கியிருக்கிறாள் கறுப்பு மகள். கறுப்புத் தமிழன் -தமிழ் வசந்தன் |
Apr 27, 2012
கறுப்புத் தமிழச்சி வேண்டும்
குறிச்சொற்கள்
கறுப்பு,
தமிழச்சி,
தமிழ் மகள்,
திருஷ்டி,
முதிர்கன்னி,
வரதட்சணை
Apr 24, 2012
நா காக்க... காவாக்கால்...
![]() |
நாகரிமற்ற வார்த்தைகள் நாவிலிருந்து விழுந்த போது பொறுமையாய் இருந்து கொண்டேன். அமைதியின் பொருள்மறந்து - நீ அபாண்டமாய் பேசிபோது சமிக்ஞையாய் செய்தி சொன்னேன். புரிந்துகொள்ளும் புத்தியற்று பொய்மேல் பொய் பொழிந்தபோது போதுமென்று எச்சரித்தேன். எதையும் பொருட்கொள்ளாது எள்ளிநகையாடிய போது எளிமையாய் எடுத்துச் சொன்னேன். சற்றும் தயக்கமின்றி சத்தியத்தை விற்ற போது கடுமையாய் எதிர்த்துநின்றேன் அதையும் அலட்சியித்து அடுத்தடுத்து பிழையிழைத்து எல்லை கடந்துவிட்டாய் கர்வம் தலைக்கேறி கண்ணியங் கெட்டழிந்து வெறியால் ஆட்டமிட்டாய் உன்னிப்பாய் நோக்குமிந்த உலகின் நினைவகன்று வரம்பை மீறுகின்றாய் கண்கள் சிவந்திருக்க உன்மேல் கனன்றிருக்க இன்னும் சீண்டுகின்றாய் இனியும் விட்டுவைத்தால் இறைவன் இல்லையென்று துணிந்தே தீங்கிழைப்பாய் தணியாக் கோபமுற்று தன்மையாய் போவமென்ற உறுதியில் நானிருக்க... இறுதியாய்ச் சொல்லுகிறேன் இதுதான் மரியாதை இத்தோடு நிறுத்திவிடு உலகால் கட்டிவைத்து தோலுரிக்கப்பட்டவர்கள் சரித்திரம் படித்ததுண்டா... ஊரே சேர்ந்துவந்து உயிரோடு கொழுத்திவிட்ட கனவான்கள் அறிந்ததுண்டா... கடலின் அமைதிக்கும் நிலத்தின் பொறுமைக்கும் கோழை பொருளல்ல கடைசி நினைவுறுத்தல் கடைபிடிக்க மறவாதே நா காக்க... காவாக்கால்.... -தமிழ் வசந்தன் |
Subscribe to:
Posts (Atom)