Apr 24, 2012

நா காக்க... காவாக்கால்...


நாகரிமற்ற வார்த்தைகள்
நாவிலிருந்து விழுந்த போது
பொறுமையாய் இருந்து கொண்டேன்.

அமைதியின் பொருள்மறந்து - நீ
அபாண்டமாய் பேசிபோது
சமிக்ஞையாய் செய்தி சொன்னேன்.

புரிந்துகொள்ளும் புத்தியற்று
பொய்மேல் பொய் பொழிந்தபோது
போதுமென்று எச்சரித்தேன்.

எதையும் பொருட்கொள்ளாது
எள்ளிநகையாடிய போது
எளிமையாய் எடுத்துச் சொன்னேன்.

சற்றும் தயக்கமின்றி
சத்தியத்தை விற்ற போது
கடுமையாய் எதிர்த்துநின்றேன்

அதையும் அலட்சியித்து
அடுத்தடுத்து பிழையிழைத்து
எல்லை கடந்துவிட்டாய்

கர்வம் தலைக்கேறி
கண்ணியங் கெட்டழிந்து
வெறியால் ஆட்டமிட்டாய்

உன்னிப்பாய் நோக்குமிந்த
உலகின் நினைவகன்று
வரம்பை மீறுகின்றாய்

கண்கள் சிவந்திருக்க
உன்மேல் கனன்றிருக்க
இன்னும் சீண்டுகின்றாய்

இனியும் விட்டுவைத்தால்
இறைவன் இல்லையென்று
துணிந்தே தீங்கிழைப்பாய்

தணியாக் கோபமுற்று
தன்மையாய் போவமென்ற
உறுதியில் நானிருக்க...

இறுதியாய்ச் சொல்லுகிறேன்
இதுதான் மரியாதை
இத்தோடு நிறுத்திவிடு

உலகால் கட்டிவைத்து
தோலுரிக்கப்பட்டவர்கள்
சரித்திரம் படித்ததுண்டா...

ஊரே சேர்ந்துவந்து
உயிரோடு கொழுத்திவிட்ட
கனவான்கள் அறிந்ததுண்டா...

கடலின் அமைதிக்கும்
நிலத்தின் பொறுமைக்கும்
கோழை பொருளல்ல

கடைசி நினைவுறுத்தல்
கடைபிடிக்க மறவாதே
நா காக்க... காவாக்கால்....

-தமிழ் வசந்தன்