Oct 6, 2015

சிலர் வாழப் பலர் சாகும் பூமி



வாய்ப்பிழந்த இளைஞர்களெல்லாம்
வழியிழந்து பசிக்கிறையாகும்
ஒரு நாள் வரும்....

எத்தனை உருண்டு புரண்டாலும்
சகவாழ்வை அடையமுடியாது
என்ற நிலை வரும் போது
தாம் நிர்க்கதிக்காளாக்கப்பட்டதன்
உண்மை புலனாகும்.

வயிறெரியச் சுயத்தை சூரியன் சுடும்போது
வாய்ப்பை அபகரித்துக்கொண்ட கயவர்களின்
உண்மை முகம் கைகொட்டிச் சிரிக்கும்...

காப்பாற்ற வழியின்றி
இறந்த உறவுகளும், இழந்த உறவுகளும்...
மனசாட்சியை உலுக்கும் தருவாயில்...
சூட்சிக்குள் சிக்க வைத்த
சூத்திரதாரியின் பெயர் விரியும்....

அயலான் விட்டெரிந்த
காசைக் கவ்விக்கொண்ட
அரசியல் கட்சிகளெல்லாம்
அடியோடு கவிழ்ந்துபோகும்....

அன்று - Brand-கள் பொடிபொடியாகும்....

அந்நியர் தொழிலகங்கள்
சாமானியர்கள் கரங்களால்
சிதறுண்டுபோகும்...

சொந்த நிலத்தின் வேர்வரை நீர் உறிஞ்சி
கோடிகோடியாய் குளிர்பானம் விற்றவர்கள்
வீதவீதியாய் விரட்டியடிக்கப்படுவார்கள்....

ஒற்றை ரூபாயையும் சாமானியனிடம்
விட்டுவைத்துவிடக்கூடாது என்கிற
கொத்தடிமை சூத்திரத்தின்
அதிபதிகள் அனைவரையும்

பொதுமக்கள் புடைசூழ
போக்கிடம் ஏதுமின்றி
வகையாய் வரிந்துகட்டி
நையப் புடைவார்கள்.

கீழ்வானம் சிவக்கும்....

பூமி எதிர்த்திசையில் சுழலும்....

தனி மனிதன் தன்
சந்தைப்படுத்தும் உரிமையை
மறுபடியும் தனக்கென மீட்டெடுப்பான்.

சொந்த மண்
சொந்த மாந்தர்களுக்கானாதாய் மாறும்...

சமத்துவம் சர்வமும் நிலைகொள்ளும்....

உலகம் தழைக்கும்!

ஊர் விளங்கும்!

ஏழை மகற்கும்
மூவேளை வயிறாரும்!

-தமிழ் வசந்தன்

Jul 5, 2014

சமத்துவம் முளைவிடும் தருணம்...



பணம்...

மனித்த்தைக் கழுவேற்றும்
மமதையூறும் மதுபானம்...

தன்னளவு கடந்து
தலைக்குள் புகுந்துகொண்டு
தரிகெட்டலையும் சுகவீனம்...

மமதை...

இல்லாதவர்களைக் கண்டு
எள்ளி நகையாடும்...

இயலாதவர்களைக் கண்டு
இழிவாய்ப் பரிகாசிக்கும்...

பிழைக்கவழியின்றி
பிச்சை கேட்பவர்களிடம்
காசைச் சுண்டியெறிந்து
கைகொட்டிச் சிரிக்கும்...

அண்டியவர்ளை எல்லாம்
நிரந்தர அடிமையாக்கும்...
மண்டியிடவைத்து
உள்ளம் குளிர்காயும்...

வன்புணர்வாய்க் கற்பழித்து
நெஞ்சுறுத்தல் ஏதுமின்றி
காசை விட்டெறிந்து
கண்டுகொள்ளாமல் கடந்துபோகும்...

கேட்பாரில்லையென்றால்
முதுகொடிய உழைத்தார்க்கு
கூலியே கொடுக்காமல்
ஏசியே விரட்டிவிடும்...

சட்டத்தை விலைக்கு வாங்கும்...
சமூகத்தை அடக்கி ஆளும்...

சுற்றத்தாரை எல்லாம்
சுயசிந்தனை அற்றோராய்
மடமை இருட்டுக்குள்
மாறாமல் வைத்திருக்கும்...

மிடிமை பீடித்த
இருண்மைச் சமூகத்தில்
விடிவெள்ளியாய் முளைக்கும்
சுயநலமற்ற போராளியால்

பணத்தாசைப் பெருச்சாலியை
புரட்சிக் குத்தீட்டி
குருதிதெரிக்க
கொன்று தீர்க்கும்.

கொடிய வரலாறு
முடிந்து போகும்.
அடிமை வர்க்கம்
விடியல் காணும்...

பணத்தை ஆளும் நிலையிலிருந்து
பணம் ஆளும் நிலைக்கு மாறும்
மனிதமற்ற மனிதர்களிடமிருந்து தான்
ஆரம்பமாகிறது...

இன்னுமொரு கம்யூனிசக் கோட்பாடு....!

-தமிழ் வசந்தன்

Oct 13, 2013

அந்தரத்தில் விரியும் கனவு

அந்தரத்தில் விரியும் கனவு
வழிப்போக்கர்களுக்கு நடுவே...
உயிரைப் பணயம் வைக்கிறேன்...
தினம் தினமும்...
வயிற்றுப் பிழைப்புக்காக...

என் வயதுச் சிறுமி
பள்ளிச்சீருடையோடு வந்து
சில்லரை போட்டுச் செல்கிறாள்...

அந்தரத்தில் நடக்கிற போது
வான் வெளியின் வெகுதொலைவில்
விமானம் கடந்து செல்கிறது...
என் விண் கனவு வானத்தில் பயணப்பட
நான் வீதிவீதியாய் பயணப்படுகிறேன்...

பசியோடு திசைதிசையாய் பயணிக்கும்போத
பாரதியின் கவிதைகள் எங்கிருந்தோ கேட்கிறது...
சுமக்கும் பாரம் முதுகை அழுத்தும்,
வலியைத் தவிர எனக்கு வேறெதும் தெரியாது

கடக்கும் நாளெல்லாம்
கனவிலிருந்து வெகுதொலைவாய்
விலகி விலகிச் செல்வதாய்
வெறுப்போடு உணர்கிறேன்

ஒரு நாள் ஏன் பிறந்தேன் என்று
என்னை நானே கேட்டுக்கொண்டால்
வாழாமலேயே சாகத்தான் என்கிற
பதிலோடு - என் கனவு
கண்களுக்குள்ளிருந்தே மறைந்திருக்கும்...
உலகில் நான் பார்த்த
வெறும் நான்கு தெருக்களுள் ஒன்றில் தான்
நானும் மடிந்துபோயிருப்பேன்...
விடைதெரியாமலேயே...
-தமிழ் வசந்தன்

Oct 12, 2013

திலீபன்களே திரண்டெழுங்கள்

திலீபன் உரை - Dhileepan Speech

திலீபன்களே திரண்டெழுங்கள் - Dhileepangale Thirandelungal

தியாகி திலீபன் - Dhileepan Sacrifice

தலீபனுக்குத் தலைவர் பிரபாகரன் அஞ்சலி - Leader Prapakaran Anjalai to Dhileepan
ஒரு திலீபனை விதைத்து
ஓராயிரம் தலீபன்கள் எழுந்திருக்கிறோம்
அறப்போர் மறவர்களாய்
திசையெங்கும் திரண்டிருக்கிறோம்

ஈழத்து நீதிவேண்டி
இரவுபகல் முழித்திருக்கிறோம்
நெஞ்சில் தீத்தழல
நகராது நிலைத்திருக்கிறோம்

விண்முட்டும் கோசங்கள் - எங்கள்
வினவுக்கு விடைகொடுக்கும்
ஈழப்போர் தியாகங்கள் - எங்கள்
உணர்வுக்குத் துணையிருக்கும்

சிங்களன் கொடூரத்தை
உலகுக்கு வெளிப்படுத்தும்
சிதைவுண்டத் தமிழினத்தின்
விடிவுக்கு வழிவகுக்கும்

மாணவச் சமுதாயம்
முன்வந்து குரல்கொடுக்கும்
முடக்கும் சதிகளுக்கும்
மடங்காது பதில்கொடுக்கும்

தமிழீழம் வெல்லாமல்
தீராது தாகம் - எம்
போருக்கு விடையின்றி
ஓயாது கோசம்

தமிழர் தாகம்
தமிழீழத் தாயகம்


திரண்டெழும் இன்னுமோர் திலீபனாய்...
- தமிழ் வசந்தன்

Oct 11, 2013

வீரப்புலி மங்கையரும், அப்பாவித் தமிழனின் கண்ணீரும்...

அம்மாமாரே...
அக்காமாரே...
தங்கமாரே...
மங்கமாரே...


சொந்தக்கொடியே..
போராளி உசுரே...
ஆறாத நெருப்பே...
தன்மானப் பொறப்பே...


சிங்களப் பிசாசுன்ன...
கதறச் செதச்சப்ப...
கையாளாகாம
கைவிட்டுப் போனேனே


அரசியல் களவாணிச்
சூதாட்டச் சுழலுள்ள
அப்பாவித் தமிழனா
அகப்பட்டுப் போனேனே


தோட்டாத் தொளச்செடுத்து...
ரத்ததந் தெரிச்சோட - நீ
விலியாலழுதப்ப
வக்கத்துப் போனேனே...


ஆறுதலுக்கும் ஆளத்து
அநாதையாத் துடிச்சப்ப
கொர கொடுக்க ஏலாம
கதியத்துப் போனேனே

அடிவயிறு எரியுதடி...
இனங்காத்த மகராசி...
ஈனப் பொறப்பா - நான்
இருந்தத நெனக்கையில...


வீரத் திருமகளே...
சாகத் துணிஞ்சவளே...
தியாகி உனக்கிந்த
பாவியாலென்ன பயன்...


சொல்லியழும் போது...
சொர்க்கம் பார்த்திருப்ப...
உனக்குன்னு அழுதப்ப
ஒரு நாயும் வாரலையே...


குண்டு தொளச்சுச்சோ...
குழிக்குள்ள பொதச்சுச்சோ...
ரத்தம் வெதச்சவளே...
நெஞ்சு வலிக்குதடி...


அரசும் தொறத்துச்சு...
நாடும் தொறத்துச்சு...
எங்கக் கதறலெல்லாம்...
யாருக்குக் கேட்டுச்சு...


தேர்தல் வருகேல...
ஒவ்வொரு மொறையும் - இங்க
ஓட்டுக்கு உனக்கொண்டு
சூதாட்டம் நடந்துச்சு...

அத்தோடு முடிஞ்சுச்சு...
அத்தனை வாக்குகளும்...
இப்போதும் உனக்கங்க...
நலமென்ன நடந்துச்சு...


உன்னோடு களங்காணும்
கொடுப்பனையும் எனக்கில்ல
இனிமேலும் உனக்காண
ஒரு போதும் வழியில்ல...


ஆனா உனக்கொன்ன
உறுதியா ஒரப்பேனே...
களத்தில நீ நின்ன
வழி நின்னு உழைப்பேனே...


புலியா புகுந்தாடி
புதிரான தமிழீழம்
அடையும் வர நானும்
அசாரா திருப்பேனே


அரசே வதச்சாலும்...
ஆள் வெச்சு செதச்சாலும்...
உசுரோட பொதச்சாலும்...
ஊர்முன்ன எரிச்சாலும்...


வழுவா திருப்பேன் - உன்
வழியில் நடப்பேனே
தொணையா இரு தாயே...
துணிவோ டெழுகின்றேன்

வீரப்புலிச் சகோதரிகளுக்கான கண்ணீர அஞ்சலியுடன்,
- தமிழ் வசந்தன்

Apr 27, 2012

கறுப்புத் தமிழச்சி வேண்டும்


அடுக்கடுக்கடுக்காய் ஆங்கிலம் பேசும்
கறுப்புத் தமிழச்சி வேண்டும்.
இழுத்து மூடிய இரும்புத் திரையை
தகர்த்து எறிந்திட வேண்டும்

திருஷ்டிப் பொட்டுக் கறுப்பு என்னும்
மடமையை மாற்றிட வேண்டும் - அவள்
மட்டந்தட்டும் மடையர்களின்
கொட்டம் தட்டிட வேண்டும்.

துணிவின் உருவம் என்பவளாய்...
அறிவின் கருவம் கொண்டவளாய்...
வெள்ளை மோகம் வெல்பவளாய்...
கறுப்புச் சரித்திரம் செய்பவளாய்...

நிறபேதத்தைக் கொல்பவளாய்...
நிறைய நிறைய கற்றவளாய்...
நிமிர்ந்து எரியும் பெண்ணெருப்பாய்...
படர்ந்து பரவும் சுடரொளியாய்...

உலகே வியக்கும் ஊற்றறிவாய்...
ஆகத்துடிக்கும் குணவதியாய்...
செயலிற் கறுப்புப் பெண்புயலாய்...
வராறுரைக்கும் மங்கையளாய்..

கறுப்பின் பொருளை மாற்றட்டும்.
கன்னியர் அவளைப் போற்றட்டும்.
மடமை இருளைப் போக்கட்டும்.
மனிதந்தன்னை நாட்டட்டும்.

கறுப்பு என்பதால் மணமாகாமல்
முடங்கியோர் நிலை மாறட்டும்.
மனது என்பதே முக்கியம் எனும்
மூலசூத்திரம் வெல்லட்டும்.

நிறங்கறுத்தவர் தலைகோணாமல்
நிமிர்ந்து நேர்கொண்டு வாழட்டும்.
நீதிமறந்து கேலிசெய்வோரை
உலகே கைகோர்த்துத் தூற்றட்டும்.

அன்பும், அறிவும், திறமையுமே
பண்பு உள்ளவர் நோக்குவது,
என்று அத்தனைப் பேரையுமே
எந்த ஆட்சியில் ஆக்குவது?

காண வேண்டி-ஓர் புரட்சிப்போர்
பாக்கியிருக்குது தமிழச்சி
எங்கிருக்கிறாய் உடனே வா
ஏங்கியிருக்கிறாள் கறுப்பு மகள்.


கறுப்புத் தமிழன்
-தமிழ் வசந்தன்

Apr 24, 2012

நா காக்க... காவாக்கால்...


நாகரிமற்ற வார்த்தைகள்
நாவிலிருந்து விழுந்த போது
பொறுமையாய் இருந்து கொண்டேன்.

அமைதியின் பொருள்மறந்து - நீ
அபாண்டமாய் பேசிபோது
சமிக்ஞையாய் செய்தி சொன்னேன்.

புரிந்துகொள்ளும் புத்தியற்று
பொய்மேல் பொய் பொழிந்தபோது
போதுமென்று எச்சரித்தேன்.

எதையும் பொருட்கொள்ளாது
எள்ளிநகையாடிய போது
எளிமையாய் எடுத்துச் சொன்னேன்.

சற்றும் தயக்கமின்றி
சத்தியத்தை விற்ற போது
கடுமையாய் எதிர்த்துநின்றேன்

அதையும் அலட்சியித்து
அடுத்தடுத்து பிழையிழைத்து
எல்லை கடந்துவிட்டாய்

கர்வம் தலைக்கேறி
கண்ணியங் கெட்டழிந்து
வெறியால் ஆட்டமிட்டாய்

உன்னிப்பாய் நோக்குமிந்த
உலகின் நினைவகன்று
வரம்பை மீறுகின்றாய்

கண்கள் சிவந்திருக்க
உன்மேல் கனன்றிருக்க
இன்னும் சீண்டுகின்றாய்

இனியும் விட்டுவைத்தால்
இறைவன் இல்லையென்று
துணிந்தே தீங்கிழைப்பாய்

தணியாக் கோபமுற்று
தன்மையாய் போவமென்ற
உறுதியில் நானிருக்க...

இறுதியாய்ச் சொல்லுகிறேன்
இதுதான் மரியாதை
இத்தோடு நிறுத்திவிடு

உலகால் கட்டிவைத்து
தோலுரிக்கப்பட்டவர்கள்
சரித்திரம் படித்ததுண்டா...

ஊரே சேர்ந்துவந்து
உயிரோடு கொழுத்திவிட்ட
கனவான்கள் அறிந்ததுண்டா...

கடலின் அமைதிக்கும்
நிலத்தின் பொறுமைக்கும்
கோழை பொருளல்ல

கடைசி நினைவுறுத்தல்
கடைபிடிக்க மறவாதே
நா காக்க... காவாக்கால்....

-தமிழ் வசந்தன்

Jun 22, 2011

ஆதலினால் துரோகம் செய்வீர்

காலங்காலமாய் காவல்துறை அதிகாரிகள்
நல்லவர்களாகவும்,
ரௌடிகள் கெட்டவர்களாகவும் தான்
சித்தரிக்கப்படுகிறார்கள்

சந்தர்ப்பவசத்தால் ரௌடிகளாகி
மீளமுடியாத சூழலில் சிக்கிக்கொண்டு
மனதுள் புழுங்கிக்கொண்டிருப்பவர்கள் உண்டு.

அதிகாரமிருக்கின்ற ஆணவத்தில்
பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு
நேர்மையான நடவடிக்கைகளுக்கு
முட்டுக்கட்டைகளாய் விளங்கும்
காவல்துறை அதிகாரிகளும் உண்டு.

இங்கே ஒன்றுமட்டும் தான்
சாத்தியம் - அது தான்
துரோகம். . .

ஒரு நல்ல ரௌடி கெட்ட ரௌடிக்கும்,
ஒரு நல்ல அதிகாரி கெட்ட அதிகாரிக்கும்
துரோகம் செய்வது மட்டும் தான்
இங்கே சாத்தியம்.

எனக்கும் துரோகம் செய்தவர்கள் உண்டு.
அவர்கள் எல்லோரும் துரோகத்தை
அயோக்கியத்தனமாக பயன்படுத்தியிருப்பவர்கள்.

ஆனால், அது ஒரு சிறந்த ஆயுதம்.
எதனாலும் முடியாததை இது
முடித்துவிடும்.

துரோகத்தால் மட்டும் தான்
பெரிய நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்ட முடியும்.
துரோகங்கள்
பலர் வம்சங்களை
அழித்திருக்கின்றன!
பல சாம்ராஜ்ஜியங்களை
வீழ்த்தியிருக்கின்றன!
வரலாற்றை மாற்றியும்,
உருவாக்கியும் இருக்கின்றன!

நல்லவர்கள் இதைச்
செய்யமாட்டார்கள் என்று
கெட்டவர்கள் நம்புவதால் தான்,
கெட்டவர்கள் இதைச்
செய்துவிட்டு புத்திசாலிகளாக(!)த்
தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

இனி நல்லவர்களும்
துரோகம் செய்யுங்கள்.
நல்லவர்களுக்கு அல்ல.
துரோகம் செய்யும்
கெட்டவர்களுக்கு. . . !

ஒரு நல்லவர் கெட்டவர்க்கு செய்யும்
ஒரே ஒரு துரோகம்
ஒரு கெட்டவர் நல்லவர்களுக்குச் செய்யும்
பல்லாயிரம் துரோகங்களிலிருந்து
சமூகத்தைக் காப்பாற்றிவிடும்.
கெட்டவர்களுக்கு துரோகம் செய்கிறவர்கள்
வரலாற்றில் துரோகிகளாக
வர்ணிக்கப்பட்டதில்லை.

வாலியை வீழ்த்திய ராமனும்,
மோகினியாய் அவதரித்த விஷ்ணுவும்,
கடவுளர்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகப்போரில் போர்க்களத்தின் முனையில்
இந்திய வெள்ளையர் படையில் இருந்து கொண்டே
வெள்ளையர்களை தாக்கி வீழ்த்திய
நேதாஜி தன்னிகரில்லாத
சுதந்திரப் போராட்ட வீரராகியிருக்கிறார்.
மாறாக சுயநலத்திற்காக துரோகம் செய்தவர்களை
வரலாறு நிந்தித்திருக்கிறது.
இயேசுவை காட்டிக்கொடுத்த
யூதாஸின் முத்தம் அந்த ரகம்.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் எதிரிக்குக் கூட
துரோகம் செய்துவிடாதீர்கள்.
இரண்டு எதிரிகளுக்கு நடுவில்
புல்லுருவிகளாய் இருப்பவர்கள்
துரோகிகள்!
அவர்களை அடையாளம் கண்டுகொண்டு
அவர்களுக்குத் துரோகம் செய்யுங்கள்.
அவர்கள் ஒழிந்தால்
உங்களுக்கும் உங்கள் எதிரிக்குமான
நேர்மையான போட்டிகளை
நீங்கள் இருவருமே
வெளிப்படையாக எதிர்கொள்ளலாம்.
முடிவில் எதிரிகளே
நண்பர்களாகவும் மாறலாம்.
நீங்கள் துரோகிகளுக்குச் செய்யும்
துரோகம் - துருவங்களைச்
சமமாக்கும் ஆற்றலுடையது.

எதிரிக்குக்கூட துரோகம் எண்ணாதவர்
நல்லவர்தான் - ஆனால்
கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும்
துரோகம் செய்யாமல் இருந்துவிட்டால்
அடுத்த தலைமுறை சமூகம்
படவிருக்கும் கொடிய விளைவுகளுக்கு
நாமும் காரணமாகிவிடுவோம்.
நன்மை ஒன்று நடக்கக்
காலதாமதம் ஆவதில் கூட
தவறேதும் இல்லை - ஆனால்,
கெட்டவர்கள் சுதந்திரமாக
எந்த நெஞ்சுறுத்தலுமின்றி
சீரழிவுகளை அரங்கேற்றிக்
களியாட்டம் போடுவதற்கு
அவ்வளவு எளிதில்
இயன்றுவிடும் என்றால்,
இவர்களை நிறுத்த,
ஒடுக்க, ஓட ஓட துரத்தியடிக்க
பயன்படுகின்ற துரோகத்தை
செய்யாமலிருப்பதும்
மன்னிக்கமுடியாத குற்றமே!

நீங்கள் கெட்டவர்களுக்குச் செய்கின்ற
ஒவ்வொரு துரோகமும்
சாத்தான் நுழைகிற வாயிற்கதவுகளை
தாழிட்டுவிடுகின்ற பூட்டு!
புறையோடிப்போன சமூக அவலங்களை
எளிதில் களைகின்ற மாற்று!

இதன் முடிவில்
கெட்ட ரௌடிகளும்,
நேர்மையற்ற அதிகாரிகளும்
ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.
சூழற்கைதியாய் புழுங்கிக்கொண்டிருக்கும்
நல்ல ரௌடிகளுக்கு
அப்போது தான்
விடிவுகாலம் பிறக்கும்.
நல்ல ரௌடிகளை
நேர்மையான அதிகாரிகள்
புரிந்துகொண்டுவிடுகின்ற
நிலைமை உண்டாகும்.
அன்று தான்
இந்தத் திருடன் போலீஸ்
விளையாட்டு
முடிவுக்கு வரும்.
நல்லதோர் சமூகம் உருவாகும்.

நல்லவர்களே. . .
நண்பர்களே. . .
ஆதலினால் துரோகம் செய்வீர்!
பச்சை துரோகி,
- தமிழ் வசந்தன்

வரம் தா

வரமொன்று தா - நெஞ்சில்
உரமென்று தா
வஞ்சந்தனை வெல்லுந்
திறமொன்று தா

கொட்டுங்கொடுங் கோன்மை கொல்கின்ற போதும் - அதை
முற்றும் எதிர்க்கின்ற மனமொன்று தா
இன்னல் பலநூறு ஏற்கின்ற போதும் - உளம்
சற்றும் சளைக்காத தினவொன்று தா

வறுமை பிடித்தென்னை வருத்திட்ட போதும் - என்
திறமை இருக்கென்ற உறுத்தொன்று தா
எதையும் எதிர்கொண்டு போரிட்டு வெல்ல - என்
இதயந் தயங்காத துணிவென்று தா

உறவே உயிர்த்துரோகம் இழைத்தாலும் கூட - நான்
எதற்குங் கலங்காத திடந்தன்னைத் தா
நஞ்சை அமிழ்தென்று தந்தாலும் கூட - தெரிந்தும்
அவர்க்காய் குடிக்கின்ற குணந்தன்னைத் தா

காலம் குறைவாக வாழ்ந்தாலே போதும் - அதை
வீணாய் கழிக்காத வினைதன்னைத் தா
வீழும் உயிர் ஒன்றும் பல்லாண்டு வேண்டாம் - இவ்
வையம் மறக்காத வாழ்வொன்று தா
- தமிழ் வசந்தன்